Sunday 3 November 2013

R.I.P. ரேஷ்மா

"படத்துக்கு போகலாம், வாங்க" என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தார் அப்பா.

1983ம் ஆண்டு - அப்போதுதான் எங்கள் குடும்பம் ஹைதராபாத் குடிபெயர்ந்தது (என்றே நினைக்கிறேன்). ஒரு விடுமுறை நாளில் (தீபாவளியா அல்லது வேறு ஏதாவது பண்டிகையா என்பது நினைவில்லை) அப்பா சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடியாததால் அதற்க்கு பரிகாரமாக எங்கள் குடும்பத்தை சுபாஷ் கை இயக்கத்தில் வெளிவந்த Hero என்ற ஹிந்தி படத்திற்கு அழைத்து செல்வதாக வாக்கு அளித்து இருந்தார்.

ஆனால் நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு (அப்பா, அம்மா, அண்ணா & 3 வயது குழந்தையாக நான்) படம் பார்க்க 8 கிலோ மீட்டர் எப்படி பயணிப்பது என்பதே அன்றைய தலையாய கேள்வி.

அசுவாரஸ்யமாக வெளியே வந்து பார்த்தால், அப்பா புத்தம் புதிய Hero சைக்கிளில் அமர்ந்துக்கொண்டு எங்களைப்பார்த்து சிரித்தார். (அந்த சைக்கிளை 2006 வரை வைத்து இருந்தார்).

இப்படியாக அனைவரும் குடும்பத்துடன் பார்த்த முதல் படம் என்பதாலேயே இந்த Hero படம் செண்டிமெண்டாக மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக அந்த படத்தில் வரும் பாடல்களை எத்தனை முறை கேட்டு இருப்போம் என்பதே கணக்கில் இல்லை. ஆடியோ கேசட் தேய்ந்து போனபிறகு, தனியாக இந்த படத்தின் பாடல்களை ஒரு காலி கேசட்டில் ரெக்கார்ட் செய்து கேட்டுக்கொண்டு இருப்போம் (Betaab மற்றுமொரு படம், அதைப்பற்றி பின்னர் வேறொரு நாளில் அலசுவோம்).

அந்த படத்தில் வரும் இந்த பாடல் அர்த்தம் புரியாத அந்த நாட்களில் பெரிதாக கவரவில்லை என்றாலும் பதின்ம வயதின் முதல் காதலை ரசிக்கும் நாட்களில் இந்த பாடல் வரிகளின் வீரியமும், அடர்த்தியும் முழுமையாக புரிந்தது. அப்போதில் இருந்து இந்த பாடலை குறைந்தது 1000 முறையாவது கேட்டு இருப்பேன் (கண்டிப்பாக மிகைபடுத்தப்பட்ட எண்ணிக்கை அல்ல நண்பர்களே, நிஜம்தான்). அந்த பாடலின் யூ டியூப் லிங்க் மற்றும் அந்த படத்தின் பாடல் வரிகள் (எழுதியது யாரென்று தெரியவில்லை) இங்கே கொடுத்து இருக்கிறேன்

 

 

Bichhde Abhi To Ham Bas Kal Parson
Jioongi Main Kaise, Is Haal Mein Barson
Maut Na Aayi Teri Yaad Kyon Aayi
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai
Ha(n)thon Pe Aaye Meri Jaan Duhai
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai.


Ek To Sajan Mere Paas Nahin Re
Duje Milan Di Koi Aas Nahin Re -2
Uspe Yeh Sawan Aaya -2
Aag Lagaayi, Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai

Toote Zamaane Tere Haath Nigode, Haath Nigode
Dil Se Dilon Ke Tune Sheeshe Tode, Sheeshe Tode
Hijr Ki Oonchi, Hijr Ki Oonchi Deevaar Banaayi
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai

Baag Ujad Gaye, Baag Ujad Gaye Khilne Se Pehle
Panchhi Bichhad Gaye Milne Se Pehle -2
Koyal Ki Kook, Koyal Ki Kook Ne Hook Uthaayi
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai
Honthon Pe Aaye Meri Jaan, Duhai
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai.

இந்த பாடலில் வரும் அந்த Floot Piece இன்றைக்கும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு அற்புதமான கம்போசிங். லக்ஷ்மிகாந்த் பியாரே லாலின் இசையில் என்னை இன்றைக்கும் Haunt செய்யும் குரலுக்கு சொந்தக்காரர் ரேஷ்மா என்ற பாடகர். இவர்தான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு இந்த கட்டுரையை எழுத தூண்டியர்.

reshma 2

ராஜஸ்தானில் ஒரு ஜிப்சி குடும்பத்தில் பிறந்து, அதே மாதம் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சிக்கு குடிபெயர்ந்தார் ரேஷ்மா. சிறுவயதில் பள்ளிக்கு செல்லாமல் வழிபாட்டு தளங்களில் பாடிக்கொண்டு வளர்ந்த ரேஷ்மா, 1959ம் ஆண்டு தன்னுடைய 12வது வயதில் சூஃபி குரு லால் ஷபாஸ் கலந்தர் அவர்களின் நினைவிடத்தில் பாடிக்கொண்டு இருந்ததை அப்போதைய பாகிஸ்தான் ரேடியோ தயாரிப்பாளர் ஒருவர் கேட்டு அசந்துவிட்டார்.

உடனே அவர் ரேஷ்மாவுக்கு பாகிஸ்தான் ரேடியோவில் பாட ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த ரேடியோ தயாரிப்பாளர் யாரென்று தெரியவில்லை. ஆனால் இசையுலகிற்கு அவரது பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படவேண்டியதொன்று என்பதில் இருவேறு கருத்து இருக்கவே முடியாது. அடுத்த ஆண்டே தொலைக்காட்சியில் பாட ஆரம்பித்த ரேஷ்மாவை பாகிஸ்தான் மட்டுமல்ல, ஆசிய துணைக்கண்டமே கொண்டாட துவங்கியது.

நட்பு ரீதியில் இயங்காத  இரண்டு நாட்டு அதிபர்களை ரசிகர்களாக கொண்ட ஒரே பாடகர் இவராகத்தான் இருக்க முடியும். அதைப்போலவே அனைத்து விஷயங்களிலும் வேறுபட்ட இரண்டு நாட்டு மக்களை இசையால் இணைக்க முடியும் என்று நம்பி அதனை மனதில் கொண்டு பல இந்தியப்படங்களில் பாடினார் ரேஷ்மா.

ராஜ் கபூர் முதல் சுபாஷ் கை வரை, 1970கள் முதல் 2004 வரை தலைமுறைகளை கடந்து, புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்டு கடைசி காலம் வரை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்த ரேஷ்மா அவர்களுக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள்.

ஒரு கலைஞனுக்கு அவனுடைய படைப்பு தலைமுறைகளை கடந்தும் நிலைத்து நிற்பதே உச்சபட்ச மரியாதை. முப்பதாண்டுகள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் சரி, ஒரு நாட்டின் சரித்திரத்திலும் சரி, மிகவும் நீண்ட கால இடைவெளியே. இந்த இடைவெளியை சர்வசாதாரணமாக கடந்த ரேஷ்மா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

ஜிப்சிக்களின் நம்பிக்கைப்படி இந்த உலகில் அனைத்துமே பயணம்தான். அதில் ஒரு சிலரின் பயணம் மட்டுமே பேசப்படுகிறது. ரேஷ்மா இன்னும் முப்பதாண்டுகள் கழித்தும் பேசப்படுவார்.

பின் குறிப்பு: ஹீரோ படம் பல மொழிகளில் பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியது. ஹிந்தியில் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கில் நம்ம நாகார்ஜுனா, கன்னடத்தில் ரவிச்சந்திரன் என்று ஒரு தனி லிஸ்ட்டே இருக்கிறது. இவ்வளவு ஏன்? அடுத்த ஆண்டு ஆதித்ய பன்சோலியின் மகனை ஹீரோவாக கொண்டு ரீமேக் செய்யப்படுகின்றது.