Saturday 26 January 2013

படித்தது 001: திரும்பி பார்க்கிறேன்: டைரக்டர் ஸ்ரீதர்-சந்திரமௌலி-அருந்ததி நிலையம்

நெடுநாட்களாகவே ஆன்லைன் ரீடிங் லைப்ரரி அக்கவுண்ட் ஒன்றினை துவக்க எண்ணி,இந்த  ஆண்டுதான் அதற்க்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால் இப்போதைக்கு இந்த ப்ளாக் மட்டுமே பிள்ளையார் சுழி. இதனையாவது ஒரு மூன்று மாதம் ஒழுங்காக மெயின்டெயின் செய்கிறேனா  பார்த்துவிட்டு மற்றது அப்புறம்.

சொந்தக்கதை:  பதிவுக்கு தேவை இல்லாதது. தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்கிப் செய்துவிடலாம். அதையும் மீறி படிப்பவர்களுக்கு ஏற்படும் கால விரயத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல 

சினிமா,ஸ்போர்ட்ஸ்,பிக்ஷன் மற்றும் நான்-பிக்ஷன் வகையறாக்களில் இந்த ஆண்டு கொஞ்சம் அடித்து ஆடலாம் என்று இருக்கிறேன். ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் கடந்த பதினான்கு ஆண்டுகளாகவே என்னுடையை Thinking Process எல்லாமே ஆங்கிலத்திலேயே நடப்பதால் தமிழில் (மறுபடியும்) படிப்பது சற்றே சிரமமாக உள்ளது. இங்கே கண்டிப்பாக அந்த தடுமாற்றதினை காணலாம். 

கண்டிப்பாக சுய முன்னேற்ற நூல்களும்,குறிப்புதவி நூல்களும் இங்கே பதிவேறா. சூடோ (Pseudo) இலக்கியவாதிகள் (இலக்கிய வியாதிகள்?), அறிவுஜீவிகளையும் கண்டாலே எனக்கு அலர்ஜி என்பதால் அவர்கள் இங்கே தவிர்க்கப்படுவார்கள். 

இவ்விடத்தில் ஜெயமோகனும் வருகை தருவார், சி மோகனும் இருப்பார். MD வாசுதேவன் நாயரும் பேயோனுக்கும் இங்கே வித்தியாசங்கள் இல்லை. சாரு நிவேதிதாவும் சரோஜாதேவியும், எஸ்.ராமகிருஷ்ணனும் ராஜேஷ்குமாரும் மதிப்பிடப்படுவது அவர்களின் Content ஐ வைத்தே தவிர அவர்களின் பெயர்களை கொண்டு அல்ல. 

இதற்க்கு மேலே நீட்ட முழக்கி போவது சுய தம்பட்டம் அடிப்பது போலிருக்கும் என்பதால் இந்த ஆரம்ப குறிப்பிற்கு இத்துடன் மங்களம் பாடப்படுகிறது. Welcome to My World, Folks.

இயக்குனர் ஸ்ரீதர் - திரும்பி பார்க்கிறேன் – சந்திரமௌலி: இந்த ஆண்டின் முதல் புத்தகமாக ஏதாவது ஒரு காமிக்ஸ் புத்தகதினையே படிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் நண்பர் ஒருவரின் பேச்சில் மயங்கி இந்த புத்தகத்தை அவரிடம் இரவல் பெற்று இரண்டு மணி நேரங்களிலேயே படித்து முடித்து விட்டேன். 360 பக்கங்கள் இரண்டு மணி நேரத்திலா? என்று ஆச்சரியப்படாமல் இருந்தால் இந்த மாதிரி வாசிப்பிற்கு நம்முடைய Sub-Conscious Mindன் துணை தேவைப்படுவது இல்லையென்பதும், இவை எல்லாமே சுவையான சினிமா சம்பவங்கள் என்பதால் சிந்திக்க அவகாசமோ, தேவையோ இல்லை என்பதும் தெளிவாகும். அதே சமயம் ஒரு விதமான Soft Reading என்பதால் சதாப்தி எக்ஸ்பிரெஸ் போல விரைவில் படித்து விட முடிந்தது.

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002  1st Page

உண்மையை சொல்வதெனின், இந்த புத்தகத்தினை படிக்க ஆரம்பிக்கும் முன் இயக்குனர் ஸ்ரீதர் பற்றி ஏதேனும் நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக என்று வினா எழுப்பி இருந்தால் வெகு சுலபமாக நான் இந்த பரிட்சையிலும் ஃபெயில் ஆகி இருப்பேன். என்னுடைய தமிழ் சினிமா குறித்தான வரலாறு,புவியியல் மற்றும் குடிமையியல் அந்த அளவுக்கு மகத்தானது. "விஸ்வநாதன், வேலை வேண்டும்" என்ற பாடல் இடம் பெற்ற ஒரு செம ஜாலியான திரைப்படத்தினை இயக்கியவர் இவர் என்பதும் தெரியும். அதற்கு மேலே, ஹும்ம்ம்ம் அவ்வளவுதான் (சொல்லப் போனால் அந்தப் படத்தின் பெயர் கூட இந்த புத்தகத்தினை படிக்கும்போது எனக்கு தெரியாது என்பதே நிதர்சனம்).

In  Fact, அந்த படத்தினையும் கூட நான் முதலில் பார்த்தது ஹிந்தியில் தான். அதுவும் டில்லியில் (என்று என்னுடைய மூளை நினைவு படுத்துகிறது). ஆகவே ஹிந்தி மொழியில் வந்தது முதல் (ஒரிஜினல்) படமா அல்லது தமிழில் வந்தது மூலப்படமா? என்பதும் கூட சந்தேகமாகவே இருந்த சூழலிலேயே இந்த புத்தகத்தினை படிக்க ஆரம்பித்தேன்.

 திரும்பி பார்க்கிறேன் By சந்திரமௌலி: இந்த புத்தகத்தின் ஆசிரியரைப்பற்றி குறிப்பு இந்த பதிவின் பின்னேயும், இந்த புத்தகத்தின் பின் அட்டையிலும் ஏற்கனவே சொல்லப்படவேண்டிய அளவிற்கு எழுதப்பட்டு விட்டதால் நேரிடையாக புத்தகத்தை பற்றிய விமர்சனத்திற்கு சென்று விடுவோம்.

கல்கி வார இதழின் பொன்விழா ஆண்டுமலருக்காக தொடங்கிய ஒரு பேட்டியே இந்த புத்தகத்தின் நதிமூலம் ரிஷிமூலம். இந்த புத்தக ஆசிரியரும் பிரபல பத்திரிக்கையாளருமாகிய சந்திரமௌலி இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் கேட்டுப் பெற்ற செய்திகளை இங்கே (முடிந்த அளவுக்கு) கோர்வையாக சொல்ல முயன்று இருக்கிறார்.

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Info About Artist Maya Page No 11

தமிழில் முழுமையான (ஆதாரம் சார்ந்த) சினிமா புத்தகங்கள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அவை ஒரு பார்வையில் தங்களின் கோப-தாபங்களை நிவர்த்தி செய்துக்கொள்ளவே எழுதப்படுகின்றன (சமீபத்திய உதாரணம் கமல் ஹாசன்-முக்தா சீனிவாசன்). ஆனால் இந்த புத்தகத்தில் முடிந்த அளவுக்கு மிகவும் நேர்மையான தகவல்களை அளித்து இருப்பது சிறப்பு. அந்த வகையில் இந்த புத்தகம் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், தகவல் தேடி'களுக்கும் ஒரு முக்கியமான புத்தகமாக அமைந்து விடுகிறது.

முதல் அத்தியாயத்தை படிக்கும்போது (வாண்டுமாமா - கௌசிகன் போல) குடும்ப புராணமாக இருந்து விடுமோ என்று யோசிக்கும்போதே சின்ன வயது நாயகன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே பெரியவன் ஆவது போல அடுத்த பக்கங்களிலேயே கல்லூரி கால சம்பவங்களுக்கு நம்மையெல்லாம் கொண்டுவந்து விடுகிறார். எங்கே எடிட் செய்யவேண்டும், எங்கே Fast Forward செய்யவேண்டும் என்பது நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.அந்த வகையில் ஒரு தேர்ந்த இயக்குனரின் கைவண்ணம் புலப்படுகிறது.

பழைய கல்கி வாசகர்கள் யாராவது இந்த கேள்விக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்: கல்கி வார இதழில் எங்கே எல்லாம் தொடரும் என்று முடித்து இருந்தார்கள்? என்பதே அந்த கேள்வி. ஒரு தொடர் கதை எழுத்தாளருக்கே உரிய விறுவிறுப்பு பல இடங்களில் கண்கூடாக தெரிகின்றது. ஒரு வேகமான ஓட்டத்தின் ஊடே  படிப்பவர்களை அதே வேகத்தில் தன்னுடன்  தக்கவைத்துக்கொள்ளும் வித்தை இந்த எழுத்தாளருக்கு இந்த புத்தகத்தில் வாய்த்திருக்கிறது. Hats off to you, Mr சந்திரமௌலி. அதற்க்கு எழுத்து நடை மட்டும்தான் காரணமா அல்லது சம்பவங்களின் சுவையா என்று வினவினால் இரண்டும் கலந்ததினால் என்று சாலமன் பாப்பைய்யா போல சொல்லிவிடுவது நன்று

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Info About MGRs Raja Thanthiram Page No 250 251

புத்தகத்தின் -கள்:

#என்னதான் முயன்று இருந்தாலும் ஒரு நேர் வரிசையில் சம்பவங்கள் இல்லாமை

#அடுத்தடுத்த சம்பவங்களுக்கிடையில் ஃப்ளாஷ்-பேக் மூலம் வேறொரு சங்கதியை  கொண்டுவருதல்

#புத்தகத்தில் இன்டெக்ஸ் இல்லாதது (அட் லீஸ்ட் படங்களின் Chronological வரிசையையாவது போட்டிருக்கலாம்

#பல விஷயங்களை ஆர்வத்துடன் துவக்கி விட்டு சடாரென முடித்துவிட்டது

#சுவையான, சுவாரஸ்யமான விஷயங்களை பகிரும்போது அவை சார்ந்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கலாம்.

#ஒவ்வொரு திரைப்படத்தினை பற்றியும் விளக்கமாக சொல்லும்போது அந்த பட விவரங்களை வெளியிட்டு இருக்கலாம் (இசை,எடிட்டிங்,நடிகர்கள்,தயாரிப்பாளர்)

புத்தகத்தின் +கள்:

#ஹேமாமாலினி இயக்குனர் ஸ்ரீதரால் முதலில் நிராகரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதற்க்கு பிறகு நடந்தது எத்துனை பேருக்கு தெரியும்? ஹேமாமாலினியை ஸ்ரீதர் மறுபடியும் நடிக்க வைக்க முயற்ச்சித்து நடக்காமல் போவது தனிகதை. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்.

#சூரஜ் பர்ஜாத்யா அவர்களின் வியாபார யுத்தி, ராஜ் கபூரின் நட்பு, எம்ஜியாருடன் இருந்த பந்தம் என்று பல சுவையான விஷயங்கள்.

#முதலில் நாடக குழுவுக்கு கதை எழுதி கொடுக்கும்போது இவர் மீது சந்தேகம் கொண்டு மாடியில் இவரை இரவு தங்க சொன்னது, சேலம் பட விநியோகச்தரின் கம்பெனியில் வேலை செய்தபோது நேர்மைக்கு கிடைத்த பரிசு, நட்பு காரணமாக கண்ணை மூடிக்கொண்டு கடன் கொடுத்தது, பின்னர் அதே நபருக்கு தேவை இருந்தாலும் மறுத்தது  என்று ஸ்ரீதரை பற்றி பல தகவல்கள்.

My Verdict:மொத்தத்தில் ஒரு ஜாலியான டைம் பாஸ் மழைக்கால மாலை நேரத்து தேனீருடன் சுவையான அசை போடும் நினைவுகளுக்கு சொந்தக்காரன். நாஸ்டால்ஜியா பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த புத்தகம் ஒரு Must Buy.

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Cover
Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Credits
Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Writers Page

1 comment:

  1. ரொமப் நாளா தேடிட்டு இருக்கேன், ஒன்லைன் கிடக்கிவில்லை, நேரில் சென்று வாங்க வேண்டும். புத்தகத்தின் அறிமுகம் நன்றாக இருந்தது

    ReplyDelete